திருச்சியில் கலப்பட டீ தூள் மற்றும் குளிர்பானம் பறிமுதல்

திருச்சியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கலப்பட டீ தூள் மற்றும் குளிர்பானத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-24 09:42 GMT

திருச்சி உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் இன்று 23-2-2022-ந்தேதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சுமார் 29 குளிர்பானம் மற்றும் டீ கடைகளை ஆய்வு செய்தனர். இதில் சுமார் 55 லிட்டர் குளிர்பானங்களில் தேதி குறிப்பிடாமலும் காலாவதி ஆகியும் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.  8 கடைகளுக்கு பிரிவு 55 -இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாய்வின்போது அம்மா மண்டபம் அருகில் உள்ள மித்திரன் என்ற டீ கடையில் 5 கிலோ கலப்பட டீ தூள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் கடையில் இருந்தவரை விசாரணை செய்ததில் திருச்சி குஜிலி தெருவை சேர்ந்த முஹம்மது ரபிக் என்பவர் கலப்பட டீ தூள் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரது ஏஜென்சியில் ஆய்வு செய்யும்போது சுமார் 45 கிலோ டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடுப்பதற்காக மூன்று சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் கலப்பட டீ தூள் விற்பனைக்காக பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில்,.. பொதுமக்களும் உணவு வணிகர்களும் இது போன்று கலப்பட  டீ தூளை விற்பனை செய்யவோ, பதுக்கி வைத்து விற்பனை செய்யக்கூடாது என்றும், குளிர்பானங்களில் காலாவதி தேதி மற்றும் தயாரிப்பு தேதி பார்த்து வாங்க வேண்டும் என்றும் கூறினார். இதுபோன்ற கலப்படம் கண்டறிந்தால்  புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின், வசந்தன், மஹாதேவன், ஜஸ்டின், அன்புச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News