பிரபாகரனை ஆதரித்து பேசியது தொடர்பாக திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்
பிரபாகரனை ஆதரித்து பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி கோர்ட்டில் சீமான் இன்று ஆஜர் ஆனார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி வந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில் நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய சீமான் விடுதலை புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவர் பிரபாகரனையும் ஆதரித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் மீது எடமலைப்பட்டிபுதூர் போலீசார் திருச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கில் இன்று சீமான் கோர்ட்டில் ஆஜரானார்.
சீமானுடன் இந்த வழக்கில் மேலும் 40 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு உள்பட 26 பேர் ஆஜரானார்கள் .இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 21ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.