திருச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தையொட்டி திருச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.;
திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருச்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 15ம் தேதி முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதின உறுதிமொழி அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த உறுதிமொழியில், இந்திய குடிமகன், குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் வெஸ்ட்ரி, ஆர்.சி., சேவா சங்கம் ஆகிய மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வுகளில் மாவட்ட சமூக நல அலுவலர் மா.நித்யா, முதன்மைக் கல்வி அலுவலர் ம.சிவக்குமார், மாணவ, மாணவியர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.