வேலை வாங்கி தருவதாக கூறி பகுதி நேர ஆசிரியையிடம் ரூ.17 லட்சம் மோசடி

அரசு பள்ளியில் வேலை வாங்கி தருவதாக பகுதி நேர ஆசிரியையிடம் ரூ.17 லட்சம் மோசடி நடந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

Update: 2022-02-28 04:51 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி தனம்(வயது 30). இவர் இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேர ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், அரசு வேலைக்கு நீங்கள் செல்ல விரும்பினால் இந்த செயலியின் லிங்க்கை கிளிக் செய்து தொடர்பு கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை நம்பி தனம், அவரது செல்போனுக்கு வந்த செயலிக்கு உள்ளே சென்றார். அப்போது எதிர்திசையில் இருந்த நபர், நீங்கள் குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் என்று மீண்டும் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

தனமும் அதை நம்பி அவ்வப்போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் ரூ.17 லட்சத்து 33 ஆயிரத்து 815-ஐ அந்த நபர் கொடுத்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அந்த மர்ம நபர், அரசு வேலை வாங்கி கொடுக்க வில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனம் இது குறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு ஆன் லைன் மூலமாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News