திருச்சியில் காவல்துறை குறைதீர்க்கும் முகாம்- 156 மனுக்களுக்கு தீர்வு

திருச்சியில் காவல்துறை சார்பில் நடந்த குறைதீர்க்கும் முகாம்களில் 156 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Update: 2022-02-28 04:16 GMT

திருச்சியில் காவல் துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்களிடம் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீதும், தீர்வு காணும் பொருட்டு குறை தீர்க்கும் முகாம்கள் (பெட்டிசன் மேளா) நடந்தது.

அதன்படி, திருச்சி கண்டோன்மெண்ட் சரகம் சார்பாக சரக அலுவலகத்தில் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையிலும், ஸ்ரீரங்கம் சரகம் சார்பாக கோட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட ரவி மினி ஹாலில் உதவி கமிஷனர் பாரதிதாசன் தலைமையிலும், தில்லைநகர் சரகம் சார்பாக உறையூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி திருமண மண்டபத்தில் உதவி கமிஷனர் ராஜீ தலைமையிலும், காந்தி மார்க்கெட் சரகம் சார்பாக அங்குள்ள ஒரு ஓட்டலில் உதவி கமிஷனர் ராஜசேகர் தலைமையிலும் முகாம்கள் நடந்தன.

அதே போல கே.கே.நகர் போலீஸ் சரகம் சார்பாக கே.கே. நகர் மற்றும் ஏர்போர்ட் போலீஸ் நிலையங்களில் உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையில் முகாம்கள் நடைபெற்றன. இதில், அந்தந்த சரகத்திற்கு உட்பட்ட சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாம்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டு, எதிர் மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவற்றில் 156 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மேல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News