குற்ற சம்பவங்களை தடுக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு

திருச்சியில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Update: 2021-10-13 11:15 GMT

திருச்சி மாநகரில்  குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தினார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி கமிஷனர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் திருச்சியில் உள்ள முக்கிய ரவுடிகளின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை தினசரி ஆய்வு செய்து, புலன் விசாரணை நிலையில் உள்ள வழக்குகளை விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவுடிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கான உரிய தண்டனையை பெற்றுத்தர காவல் உதவி கமிஷனர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர்களை சந்தித்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் இ.த.ச பிரிவு 229படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பழிவாங்கும் கொலை சம்பவங்கள் நடை பெறா வண்ணம் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை அடையாளம் கண்டறிந்து அவர்கள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து காவல் அலுவலர்கள் கண்காணிப்பு செய்ய வேண்டும். அனைத்து சரித்திர பதிவேடு ரவுடிகளை காவல் அலுவலர்கள் தினசரி தணிக்கை செய்ய வேண்டும். நிபந்தனைக்கு உட்பட்டு பிணையில் வந்தவர்கள் காவல் நிலையத்தில் கையொப்பமிடுகிறார்களா? என்று தணிக்கை செய்ய வேண்டும்.

குற்ற வழக்குகளிலிருந்து விடுதலையான எதிரிகளை கண்காணிக்க வேண்டும். செயல்பாட்டில் உள்ள சரித்திர பதிவேடு ரவுடிகளின் சொத்து விபரங்களை சேகரித்து அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருச்சி மாநகரத்தில் ரவுடிகளால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் அறவே தடுக்கும் பொருட்டு தகுந்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் காவல் உதவி கமிஷனர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் எவ்வித பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கூறினார் .

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் (சட்டம் மற்றும் ஒழுங்கு), முத்தரசு (குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு)ஆகியோர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News