குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்த்து கலெக்டரிடம் மனு

திருச்சியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-03-01 08:30 GMT

திருச்சியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க வந்தனர்.

திருச்சி தாரா நல்லூர் கிருஷ்ணாபுரம் குடியிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் ராமலிங்கம், தமிழரசன் மற்றும் அ.தி.மு.க.பிரமுகர் கலீலுல் ரகுமான், அப்துல் ஹக்கீம், அபுதாஹீர்,இளங்கோவன் உள்ளிட்டபூக்கொல்லை தெரு, கீரைகடைதெரு, வசந்த நகர், முஸ்லிம் தெரு ஆகியபகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

கலெக்டர் சிவராசுவை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணாபுரம் சாலை பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இந்த சாலையை அலங்கநாதபுரம், கீரைகடை தெரு, வசந்த நகர், கிழக்கு மற்றும் மேற்கு தாராநல்லூர், கிருஷ்ணாபுரம் முஸ்லிம் தெரு, கிருஷ்ணாபுரம் நடுத்தெரு பகுதிகளில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த சாலை வழியாக தான் கல்விக் கூடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணாபுரம் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை மற்றும் பார் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த கடை அமைய இருக்கும் வீடானது சுமார் 120 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஆகும். வீட்டின் மாடியில் மதுபான பார் அமைய இருப்பதால் பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்களை குடிமகன்கள் அருகிலுள்ள வீடுகள் மீது வீசி எறியும் வாய்ப்பு உள்ளது. மேலும் இங்கு மது குடிக்க வரும் குடிமகன்களால் பள்ளி சிறுவர்கள், பெண்கள் ஆகியோருக்கு இடையூறு ஏற்படும். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுஅடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சாலையாக இருக்கிறது.எனவே இந்த சாலையில் மதுபானக்கடை அமைந்தால் மேலும் போக்குவரத்து முடங்க வாய்ப்பு உள்ளது. எனவே கிருஷ்ணாபுரம் ரோட்டில் புதிய மதுபான கடை திறக்கும் திட்டத்தை ரத்து செய்து குடியிருப்பு வாசிகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவைபெற்றுக்கொண்ட கலெக்டர் சிவராசுஇது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். 

Tags:    

Similar News