கணவருடன் கோபித்துக் கொண்டு சென்னை சென்ற புதுப்பெண் திருச்சியில் மீட்பு

கணவருடன் கோபித்து கொண்டு, திருமணம் ஆன 4 மாதத்தில் வீட்டை விட்டு வெளியேறிய புதுப்பெண் திருச்சியில் மீட்கப்பட்டார்.

Update: 2022-01-26 10:22 GMT

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பஞ்சாயத்து பி.டபிள்யூ காலனியை சேர்ந்தவர் யுவராஜ். அவரது மனைவி சங்கீதா (வயது 23). இவர்களுக்கு 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதற்கிடையில், கணவன் மனைவி இடையே நேற்று முன்தினம் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையில் கோபமடைந்த சங்கீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் சென்னையில் தங்கி வேலைபார்க்கும் தனது தோழிகளுடன் சேர்ந்து தானும் வேலை தேடி செல்ல திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறி நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்ல திண்டுக்கல்லில் டிக்கெட் எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார்.

ரெயிலில் செல்லும் வழியில் கோபம் தணிந்து மனம்மாறிய சங்கீதா மீண்டும் கணவரின் வீட்டிற்கே செல்ல முடிவெடுத்துள்ளார். இதனால், ரெயில் இரவு 10.15 மணியளவில் திருச்சிக்கு வந்த நிலையில் அதில் இருந்து சங்கீதா இறங்கியுள்ளார். மீண்டும் திண்டுக்கல் செல்வதற்கான ரெயில் இல்லாததால் சங்கீதா நீண்ட நேரம் ரெயில்வே பிளாட்பாரத்திலேயே செய்வதறியாது நின்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த சில இளைளர்கள் சங்கீதாவை சூழ்ந்துள்ளனர். இதனால், பதற்றமடைந்த சங்கீதா ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சங்கீதாவை மீட்டனர்.

பின்னர் அவரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கணவரிடம் சண்டைப்போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும், பின்னர் மனம் மாறி மீண்டும் வீட்டுக்கே செல்ல முயற்சித்த போது இந்த சம்பவம் நடந்ததாக சங்கீதா கூறியுள்ளார்.

இதையடுத்து, திண்டுக்கல் போலீசார் மற்றும் சங்கீதாவின் கணவர் யுவராஜிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலையடுத்து திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வந்த யுவராஜ் தனது மனைவியை சமாதானபடுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார். மனைவி சங்கீதாவை மீட்டு கொடுத்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு யுவராஜ் நன்றி தெரிவித்தார்

Tags:    

Similar News