திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மன நல விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் நடந்த மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2021-10-13 10:15 GMT

உலக மன நல வாரத்தையொட்டி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.

உலக மனநல தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு தேசிய நல வாழ்வு திட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணித் துறை, ஸ்ரீ வருத்தாஸ்ரம் ஆகியவை  சார்பில் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்த வாரம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு மனநலம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி திருச்சி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு இருந்து துவங்கி மத்திய பஸ் நிலையம் வழியாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

இந்த பேரணியில் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவ பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு மனநலம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு  வந்தனர்.

இதில் அரசு மருத்துவமனை சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஸ்ரீ பிரியா தேன்மொழி,மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி மன நல துறை தலைவர் நிரஞ்சனா தேவி, மாநகராட்சி நகர்நல அலுவலர் யாழினி, பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித் துறை தலைவர் ரால்டன், மருத்துவர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News