பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு

பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Update: 2024-03-26 16:18 GMT

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்.

திருச்சியில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்  மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து தீர்ப்பு பெற்றுத்தர அறிவுரை வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

கடந்த 11-8 -2019 ஆம் தேதி திருச்சி விமான நிலைய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் மெயின் ரோட்டில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கின் எதிரியான காந்திநகரை சேர்ந்த சிவ சண்முகம் (வயது 45 )என்பவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு கடந்த 3 -10 -2019 ஆம் தேதி சிவசண்முகம் மீது திருச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்கவேல் விசாரணையை நடத்தி வந்தார். இன்று இந்த வழக்கில்  தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட சிவசண்முகத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் ரூ. ஐந்தாயிரமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆனந்தன் ஆஜராகி வாதாடினார். வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அப்போதைய ஆய்வாளர் பெரியசாமி ,புலன் விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்கள் நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்திய  தற்போதைய ஏர்போர்ட் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் நீதிமன்றத்தில் பணிபுரிந்த காவல் ஆளினர்களையும் மாநகர காவல் ஆணையர் காமினி பாராட்டினார்.

Tags:    

Similar News