திருச்சியில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: போலீசார் விசாரணை

திருச்சி அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 2 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-12-06 05:00 GMT

பைல் படம்.

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் அன்பில் தர்மலிங்கம் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். இவருடைய மனைவி பாரதி (வயது 53). இவர் தினமும் காலை தனது வீட்டில் இருந்து பஞ்சப்பூரில் உள்ள பசுமை பூங்காவுக்கு நடைபயிற்சி செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று காலை வீட்டில் இருந்து பசுமை பூங்காவுக்கு நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், பாரதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார்.

ஆனால், பாரதி சுதாரித்துக்கொண்டு சங்கிலியை இறுக்க பிடித்து கொண்டார். இதில் 2 பவுன் மட்டும் அந்த வாலிபரின் கையில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றார்.

இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸில் பாரதி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு, சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிய மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News