மதுபாட்டில்கள் திருட்டை கண்டு பிடித்த தனிப்படை போலீசாருக்கு ஐ.ஜி. பாராட்டு

லாரியில் கொண்டு சென்றபோது டாஸ்மாக் மதுபாட்டில்கள் திருடிய கும்பலை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை ஐ.ஜி. பாராட்டினார்.

Update: 2022-02-18 13:58 GMT

லாரியில் திருடப்பட்ட மது பாட்டில்களை கண்டுபிடித்த தனிப்படை போலீசாருக்கு மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த மாதம் 22-ஆம் தேதி மதுராந்தகத்திலிருந்து சிவகங்கைக்கு அரசு டாஸ்மாக் மதுபாட்டில் லோடு ஏற்றி சென்ற லாரி திருச்சி டோல்பிளாசாவில் நிற்கும் சமயத்தில் பார்த்த போது யாரோ லாரியின் தார்ப்பாயை கிழித்து 36 பெட்டி அடங்கிய 725 மதுபாட்டில் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த லாரி டிரைவர் செல்வம் (வயது 36) என்பவர் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக சமயபுரம் காவல் நிலையத்தில் வழங்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் ஆகியோர் மேற்பார்வையில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

மேற்படி தனிப்படைகள் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் திருச்சியிலிருந்து சென்னை வரை உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி கிடைத்த ரகசிய தகவலின்படி சிறுகனூர் சனமங்களம் பிரிவு ரோடு, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 47), பழனிசாமி (வயது 40), கீரனூர் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி (வயது 24), திளேஷி (வயது 35)மற்றும் சென்னையை சேர்ந்த கிளி (வயது 41) ஆகியோர்களை விசாரணை செய்ததில் அவர்கள் மேற்படி அரசு டாஸ்மாக் மதுபாட்டில் லோடு லாரி நெடுஞ்சாலையில் வரும் போது தங்களது இரண்டு நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி லோடு லாரியின் முன்பக்கம் ஒரு வாகனமும், பின்புறம் ஒரு வாகனமும் சென்று லோடு லாரியின் மீது ஏறி தார்ப்பாயை கிழித்து மதுபாட்டில் பெட்டிகளை திருடியதாக ஒப்புக் கொண்டனர்.

மேற்படி நபர்களை கைது செய்து அவர்கள் திருடிச் சென்ற மதுபாட்டில்களை விற்ற பணம் ரூ 1,40,000/-மும் மீதமுள்ள 103-பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க விரைவாக செயப்பட்ட தனிப்படையினரை காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் சரவணசுந்தர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.

Tags:    

Similar News