3 நாட்களுக்கு கனமழை: விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-03-05 12:30 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு மழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்கள் மற்றும் பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

அறுவடை செய்து உலர்த்தி காயவைக்கப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். மழைக்குப்பின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தங்களது நெல்லை கொண்டு சென்று விற்பனை செய்யலாம்.

மழையின் போது கால்நடைகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் மேற்கொண்டு மழையின் தாக்கத்தில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News