மாணவர்கள் விடுதியில் செல்போன் திருடிய முன்னாள் மாணவர் கைது
மாணவர்கள் விடுதியில் செல்போன் திருடிய முன்னாள் மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இதே வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்கள் விடுதியில் 2-செல்போன்கள் திருடு போனது குறித்து விடுதி வார்டன் சிவராமிடம் மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். இது குறித்து வார்டன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரான அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சிபு ஆபிரகாம் என்பவர் மாணவர்களின் செல்போன்களை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் சிபு ஆபிரகாமிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.