முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Update: 2022-01-13 06:13 GMT

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதம் மற்றும் அவரது வழக்கறிஞர் இல்லத்தில் தமிழக காவல்துறை நடத்திய சோதனை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மோசடி புகார் தொடர்பாக இதுவரை ராஜேந்திர பாலாஜிக்கு தமிழக காவல்துறை சம்மன் வழங்கவில்லை.

முன் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் முன்னரே அவரை கைது செய்தது நீதிமன்ற அவமதிப்பாகும் என வாதிட்டார்.

இதனைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்தனர்.

இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு ராஜேந்திர பாலாஜி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Tags:    

Similar News