திருச்சியில் மூதாட்டியை ரப்பர் படகு மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருச்சியில் மழைநீர் வடியாததால் வீட்டின் மாடியில் தவித்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.

Update: 2021-11-24 06:32 GMT

திருச்சி ஜே.கே. நகரில் மழை நீரால் சூழப்பட்ட வீட்டில்  இருந்து மூதாட்டியை தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் வீடுகளின் முன்பு தேங்கிய மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும், பெரும்பாலான சாலைகளும் சேதம் அடைந்துள்ளன. இந்த நிலையில் நேற்று மீண்டும்  பலத்த மழை பெய்தது. இதில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதற்கிடையே திருச்சி ஜே.கே.நகர் பகுதியில் ஒருவாரத்துக்கும் மேலாக மழைநீர் வடியவில்லை. இதனால் வயதானவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். அந்த பகுதியில் ஒரு வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் முதல்மாடியில் தவித்த வள்ளியம்மாள் (வயது 95) என்ற மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டு கொண்டு வந்தனர்.

Tags:    

Similar News