நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த திருச்சி வாலிபருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி அருகே விவசாயியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2021-10-23 03:23 GMT

திருச்சி மாவட்டம் போசம்பட்டி வியாழன்மேடு பகுதியை சேர்ந்தவர் மணியன். இவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 40). விவசாயி. மணியனின் தம்பி சிங்காரத்தின் மகன் கார்த்திகேயன் (34). இவர்கள் இருவருக்கும் இடையே பொதுப்பாதை பிரச்சனை சம்பந்தமாக சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி காலை கார்த்திகேயனுக்கும், மணியனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் மணியனை கத்தியால் குத்தினார். இதனை தடுக்க வந்த கோவிந்தராஜ், அவரது தங்கை போதும் பொண்ணு ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. மூன்று பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் இறந்தார்.

இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் கார்த்திகேயனை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். திருச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட கார்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனையும் 9 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News