தமிழகத்தில் ஆணவ படுகொலை தடுப்பு சட்டம் இயற்ற திருமாவளவன் கோரிக்கை
தமிழகத்தில் ஆணவ படுகொலை தடுப்பு சட்டத்தை முதல் அமைச்சர் உடனடியாக இயற்றவேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்கில் கலந்து கொள்ள இன்று திருச்சிக்கு வருகை தந்த வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதில் வி.சி.க 43 ஒன்றிய கவுன்சில் இடங்களிலும் 4 மாவட்ட கவுன்சில் இடங்களிலும் போட்டியிட்டது. அதில் 27 ஒன்றிய கவுன்சில் இடங்களையும்,3 மாவட்ட கவுன்சில் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். இது அனைத்து தரப்பு மக்களும் வி.சி.க/வை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை காட்டுகிறது. பா.ஜ.க வும் சங்பரிவார் இயக்கங்களும் சமூக நீதிக்கு எதிராக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
பா.ஜ.க ஒருபுறம் சமூக நீதியை ஆதரிப்பது போலவும், மறுபக்கம் அதற்கு சவக்குழி தோண்டும் வேலையையும் செய்து வருகிறது. இது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
வரும் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தில் அமர்வதை தடுக்க இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஆணவப்படு கொலை தடுப்பு சட்டத்தை அவசர சட்டமாக இயற்ற வேண்டும்.விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றிடயை விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகையாக பார்க்க முடியாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம். தமிழ்நாட்டில் அதிகம் கவனிக்க கூடிய வெற்றியாக தி.மு.க கூட்டணியின் வெற்றி அமைந்துள்ளது.
அ.தி.மு.க விற்கு வலிமையான தலைமை அமைய வில்லை. பா.ஜ.க வை சார்ந்து இயங்கும் வரையில் அ.தி.மு.க விற்கு இந்த சரிவு தொடரும். அ.தி.மு.க. வினரால் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்டவர்களை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை. அ.தி.மு.க வில் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் இருந்த கட்டுக்கோப்பு தற்போது இல்லை.
அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டேன் என அறிவித்து விட்டு மீண்டும் சசிகலா அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சிக்க முடியாது. சசிகலா விரும்பும் நேரத்தில் அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது. தலைவர்களின் சமாதிக்கு சசிகலா செல்ல அனுமதி கேட்டுள்ளார். அவருக்கு அதற்கு உரிமை இருக்கிறது. அவரை யாரும் தடுக்க முடியாது. அவருக்கு அனுமதி வழங்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் தனியார் எண்ணெய் நிறுவனங்களிடம் இருக்கிறது. இந்த அதிகாரத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசாக பா.ஜ.க அரசு இருக்கிறது.
நீட் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பிற மாநில முதல்வர்களின் ஆதரவை திரட்டுவது பாராட்டத்தக்கது. தமிழ்நாடு சட்டபேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர், குடியரசு தலைவர் ஆகியோரிடம் கையெழுத்து பெற்று தர வேண்டியது பா.ஜ.க அரசின் கடமை. நீட் தேர்வை ரத்து செய்யும் விவகாரத்தில் சட்ட ரீதியான தீர்வை தி.மு.க கொண்டு வரும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்