வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது பின்றபற்றவேண்டிய விதிமுறைகள் தெரியுமா?

நகர்ப்புற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது பின்றபற்றவேண்டிய விதிமுறைகளை ஆணையம் அறிவித்துள்ளது.

Update: 2022-02-07 09:54 GMT

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 12,838 பதவியிடங்களுக்கான தேர்தல் வருகிற 19ந்தேதி நடைபெற உள்ளது.  இவற்றில் போட்டியிட  மனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

நாளை முதல் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள்.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேடபாளர்கள் கொரோனா பரவலை தடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அறிவித்து உள்ளது.

இதன்படி தமிழகத்தில் வருகிற 11ம் தேதி வரை  சாலை நிகழ்ச்சிகள், பாதயாத்திரை,  சைக்கிள், பைக் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட தேதி முடிந்த பின்னர் உள்ள சூழலை பொறுத்து தேர்தல் ஆணையம் அடுத்த அறிவிப்பை வெளியிடும்.

அரசியல் கட்சிகளின் ஊர்வலம், குறிப்பிட்ட வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர் தொடர்புடைய ஊர்வலத்திற்கும் 11 ம்தேதி வரை அனுமதி மறுக்கப்படுகிறது.

நியமிக்கப்பட்ட திறந்த வெளி மைதானத்தில்  அரசியல் கட்சி அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் அதிக பட்சம் 1000 பேர் அல்லது மைதானத்தின் பொள்ளளவில் ஐம்பது சதவீத மக்கள் அல்லது குறைவான எண்ணிக்கையுடன் நடத்துவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

உள் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில்  அதிக பட்சம் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வாக்காளர் செல்லும் போது பாதுகாவலர் நீங்கலாக அதிக பட்சம் 20 பேர் வரை மட்டுமே செல்லவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News