திருச்சி விமான நிலையத்தில் சரக்கு முனைய சேவை தற்காலிகமாக நிறுத்தம்

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக விமான நிலையத்திற்கு சரக்குகளை கொண்டு வரவேண்டாம் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.

Update: 2022-01-10 06:00 GMT

பைல் படம்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் விமான நிலையத்தில் செயல்படும் சரக்கு முனையத்தில் திருச்சி மற்றும் மற்ற மாவட்டங்களில் விளையும் காய்கறிகள், பழ வகைகள் மற்றும் பூக்கள், பால் பொருட்கள் என தினமும் குறைந்த பட்சம் 20 முதல் 25 டன் சரக்கு கையாளப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரையிலான சரக்குகளை விமான நிறுவனங்கள் கையாள்கின்றன.

தற்போது நிர்வாக காரணங்களுக்காவும், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும் விமான நிலையத்திற்கு சரக்குகளை கொண்டு வரவேண்டாம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் ஏற்றுமதியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் திருச்சி விமான நிலையத்தில் சரக்கு முனைய சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மறு திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு சரக்கு முனையத்தை மூடக்கூடாது. சரக்குகளை வழக்கம்போல் கையாள வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் பெருத்த நஷ்டத்தை நாங்கள் சந்திக்க நேரிடும். எனவே சரக்கு முனையத்தை உடனடியாக மூடும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று பூ, பழம், காய்கறி ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News