திருச்சி மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களுக்கான விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-09 15:00 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாவட்டத்தில் இயல், இசை மற்றும் நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமை அடிப்படையில் விருது வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வு குழு விரைவில் கூட்டப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், ஓவியம், கும்மி கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், மாறாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கைச்சிலம்பாட்டம் மற்றும் இசைக்கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புற கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

18 வயது மற்றும் அதற்குட்பட்ட வயது கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச்சுடர் மணி விருதும், 51 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்ம விருதும், 66 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயது சான்று மற்றும் கலை தொடர்பான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், திருச்சி மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்ட கலை மன்றத்தில் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்ய கூடாது. விருது பெற தகுதி வாய்ந்த கலைஞர்கள் வருகிற 21-ந் தேதிக்குள் உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட்சாயில் டெப்போரோடு, மூலதோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி-6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News