மாநகர போலீஸ் கமிஷனரிடம் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மனு
திருச்சியில் 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தார்.;
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும். உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்த, திருச்சியில் 11.10.2021 முதல் 26.11.2021 வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனையும், திருச்சி மாநகர சட்டம் & ஒழுங்கு காவல் துணை கமிஷனர் சக்திவேலையும், சுப்ரமணியபுரத்தில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்தார்.
உடன், ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, சங்கத்தின் மாநில துணை தலைவர் மேகராஜன், மாநில செயலாளர் நகர் ஜான்மெல்கியோராஜ், மாநில செய்திதொடர்பாளர் பிரேம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.