திருச்சியில் ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி- சாலை மறியலால் பரபரப்பு

திருச்சியில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர் போலீசாரிடம் சிக்கினார், சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-17 15:27 GMT
ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்ற பிரச்சினை தொடர்பாக திருச்சியில் சாலை மறியல் நடந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாநகராட்சிக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 56-வது வார்டில்  சுயேட்சையாக போட்டியிடும் கவிதா பெருமாள் என்ற வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி, வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக சக்திவேல் என்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதை கேள்விபட்டவுடன் அப்பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக குவிந்தனர்.

மேலும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பணம் வினியோகம் செய்ததில் ஒருவர் மட்டும் சிக்கிய நிலையில் மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News