திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-01-24 11:35 GMT

திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி.தொழிற்சங்கத்தினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

240 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எந்த வேலையாக இருந்தாலும் மாத சம்பளம் ரூ. 21,000 வழங்க வேண்டும், இ.பி.எஸ்.- 95 மற்றும் நலவாரியங்களில் குறைந்த பட்ச ஓய்வூதியம் மாதம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும்  இந்தியா முழுவதும் இன்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.

சாலை மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

அந்த வகையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. இந்த பேரணிக்கு சங்கத்தின் தேசிய செயலாளர் வகிதா நிஜாம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி அவர்கள் பேரணியாக சென்று சாலையில் அமர்ந்து மறியல் செய்தார்கள். கோரிக்கைகள் அடங்கிய கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் சிறிது நேரம் ஆர்ப்பாட்டமும் செய்தார்கள். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

இதேபோல திருச்சி மாவட்டத்தில் இன்று மணப்பாறையில் இன்று இந்திரஜித்  தலைமையிலும், சோமரசம்பேட்டையில்  மாவட்ட  கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் முருகன் தலைமையிலும், துறையூரில் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் கணேசன் தலைமையிலும், திருவெறும்பூரில் பாரத மிகு மின் தொழிற்சங்க பொதுச்செயலாளர் பாலமுருகன் தலைமையிலும், வையம்பட்டியில் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க துணை செயலாளர் வீராசாமி தலைமையிலும், லால்குடியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க  தலைவர் பழனிராஜ் தலைமையிலும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

Tags:    

Similar News