கும்பகோணம் 10-வது வார்டில் 45 ஆண்டுக்கு பின்னர் தி.மு.க. வெற்றி
கும்பகோணம் மாநகராட்சி 10-வது வார்டில் 45 ஆண்டுக்கு பின்னர் தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது.;
நடராஜன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 10வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜே. நடராஜன் வெற்றி அடைந்து உள்ளார். இந்த வார்டில் கடைசியாக கடந்த 1977 ஆண்டில் கும்பகோணம் நகராட்சியாக இருந்த போது தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது.
அதன் பின்னர் சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த வார்டை தி.மு.க. கைப்பற்றி உள்ளது என்பது மட்டும் அல்ல வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் நடராஜன் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவலாகும்.
பல ஆண்டுகாலமாக நகராட்சியாக இருந்த கும்பகோணம் மாநகராட்சி அந்தஸ்து பெற்ற பின்னர் முதல் முறையாக தற்போது மாநகராட்சி தேர்தலை சந்தித்து உள்ளது. முதல் தேர்தலிலேயே கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை தி.மு.க. அலங்கரிக்கப்போகிறது.
அது மட்டும் இன்றி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தவிர கும்பகோணமும் மாநகராட்சியாக்கப்பட்டு இருப்பது இந்த மாவட்டத்தில் 2 மாநகராட்சி உள்ளது என்ற பெருமையையும் பெறுகிறது.
இந்துக்களின் புராதன நகரங்களில் ஒன்றாக கருதப்படும் கும்பகோணம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி இருப்பது தி.மு.க.வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.