திருச்சியில் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை

திருச்சியில் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-05-26 13:41 GMT

திருச்சி உறையூரில் இளைஞர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் பகுதி டாக்கர் ரோட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (வயது 28 ).இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் தேடி வந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் மார்க்கெட் பகுதியில் சண்முகம் நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது திடீரென அங்கு மூன்று
மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் சண்முகத்தை தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினார்கள்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம் அலறி அடித்துக் கொண்டு ஓடினார். அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டியது. கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்குள் சண்முகம் புகுந்தார். ஆனால் அங்கும் விடாமல் அவரை அந்த கும்பல் சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே சண்முகம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடினார்கள். இது பற்றிய தகவல் அறிந்ததும் உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .அவர்கள் சண்முகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் நடத்திய விசாரணையில் குதிரை ரேஸ் பந்தயம் தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாக சண்முகம் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது . கொலையாளிகள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள்  என்ற விவரம் உடனடியாக கிடைக்கவில்லை.

Tags:    

Similar News