திருச்சியில் புதிதாக தேர்வான சிறை காவலர்களுக்கு 6 மாத பயிற்சி துவக்கம்

திருச்சியில் புதிதாக தேர்வான சிறைக்காவலர்களுக்கு 6 மாத பயிற்சியை மாநகர போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-14 13:15 GMT

திருச்சியில் சிறைக்காவலர்களுக்கான 6 மாத கால பயிற்சி வகுப்பினை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்பட்ட 2020 – ஆம் ஆண்டுக்கான காவல் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 124 சிறைக் காவலர்களுக்கு கடந்த 08.03.2022 – ஆம் தேதி பணிநியமண ஆணை வழங்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக , தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப் பணிகள் துறையில் தேர்வான ஆண் மற்றும் பெண் சிறைக் காவலர்களுக்கான 6 மாத கால அடிப்படை பயிற்சி துவங்கும் விழா இன்று திருச்சி மத்தியசிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது .

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி. கார்த்திகேயன் பயிற்சி கையேட்டினை வெளியிட்டு பேசினார் . அவர் பேசுகையில்

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிக்கு புதிதாக பணி நியமனம் பெற்ற உங்களை அன்புடன் வரவேற்று மகிழ்கிறேன். பயிற்சி காலங்களில் நீங்கள் எடுக்கும் பயிற்சிதான் எல்லாவற்றிக்கும் அடித்தளமாக அமையும். பொது இடத்தில் சவால்களை சந்திக்க உதவியாக இருக்கும். பயிற்சி பெறும் இடத்தில் மட்டுமல்லாது  பொது இடத்திலும் தனிப்பட்ட முறையிலும் ஒழுக்கத்தை பேணிகாக்க வேண்டும் என்றார்.

இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறை திருச்சி சரக துணைத் தலைவர் ஜெயபாரதி, மத்தியசிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் மகளிர் தனிச்சிறை கண்காணிப்பாளர் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News