திருச்சியில் போலீஸ் எனக்கூறி நூதன முறையில் 10 பவுன் செயின் பறிப்பு

திருச்சியில் போலீஸ் எனக்கூறி நூதன முறையில் 10 பவுன் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-06 05:15 GMT

பைல் படம்.

திருச்சி, பாலக்கரை பருப்புக்காரத்தெருவை சேர்ந்த காளிமுத்து (வயது 65) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் காலை பாலக்கரை மெயின்ரோட்டில் உள்ள ஒரு வங்கி அருகே நடந்து சென்றார்.

அப்போது அங்கு நின்ற 2 பேர் காளிமுத்துவை வழிமறித்து தங்களை போலீஸ் என கூறிக்கொண்டனர். பின்னர் மூதாட்டியிடம், முககவசம் அணியாமல் வெளியே செல்லலாமா? என்று கேட்டு முககவசம் அணியும்படி கூறி உள்ளனர்.

மேலும், திருடர்கள் நடமாட்டம் இருப்பதால் அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலி, தோடு உள்ளிட்ட நகைகளை கழட்டி தரும்படியும், அதை காகிதத்தில் மடித்து தருவதாகவும், பாதுகாப்பாக எடுத்து செல்லும்படியும் கூறி உள்ளனர்.

இதை நம்பிய காளிமுத்து, தான் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை கழட்டி அவர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் வெற்று காகிதத்தை மடித்து அவரிடம் கொடுத்துவிட்டு, நகைகளுடன் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது நேரத்தில் காளிமுத்து காகிதத்தை பிரித்து பார்த்தபோது, அதில் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பாலக்கரை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மூதாட்டியை ஏமாற்றிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News