திருச்சி: பள்ளி மாணவனை தாலி கட்ட வைத்த ஆசிரியை போக்சோவில் கைது

திருச்சி: பள்ளி மாணவனை தாலி கட்ட வைத்த ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-03-24 16:47 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் உள்ள சிக்கத்தம்பூரை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 25). இவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் அவரிடம் 11ஆம் வகுப்பு படித்த மாணவரும் இவரும் நெருக்கமாக பழகி உள்ளனர். இந்த நிலையில் இரண்டு பேரும் கடந்த 5 ஆம் தேதி திடீரென மாயமானார்கள்.

இதனை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் ஆசிரியை மீது சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 11ஆம் தேதி துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடினார்கள். அவர்களது செல்போன் அழைப்புகள் மற்றும் இருப்பிடங்களை ஆய்வு செய்தபோது அவர்கள் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் திருச்சிக்கு வந்து மாணவனையும் ஆசிரியையையும் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது துறையூரில் இருந்து கிளம்பி தஞ்சாவூர், திருவாரூர் என இடங்களில் சுற்றித் திரிந்துவிட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மைனர் வயதான மாணவனை கடத்தி சென்று தனக்கு தாலி கட்ட வைத்ததாக ஆசிரியை மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவன் 18 வயதிற்கு கீழ் உள்ளவர் என்பதால் அவரை திருச்சியில் ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News