நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஐ.ஜி.யிடம் மனு

நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-01-12 14:27 GMT

நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்க வந்த தம்பதியினர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள எரகுடி வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் தனது மனைவியுடன் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம்  புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், நான் எனது பாட்டனார் பழனியாண்டியின் நிலத்தில் சொந்த அனுபவ பாத்தியமாக பல ஆண்டுகாலமாக வசித்து வருகிறேன். மேற்படி இடத்தை எனது மனைவி தாமரைசெல்வியின் பெயருக்கு கடந்த 1998-ம் ஆண்டு தானசெட்டில்மெண்டாக எழுதி வைத்துள்ளேன். மேற்படி நிலம் சம்பந்தமான பத்திரங்களை கொடுத்து வங்கியில் கடன் பெற்று நிலத்தின் ஒரு பகுதியில் வீட்டையும் கட்டியுள்ளேன்.

இந்தநிலையில் எனது நிலத்தை காவல்துறையில் பணியாற்றும் 3 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன்  இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News