பெற்ற குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Update: 2021-07-26 05:15 GMT

துறையூர் பச்சமலை புத்தூரைச் சேர்ந்த கார்த்திக்கின் மனைவி நிஷா (21). இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த விபத்தொன்றில் கார்த்திக் எதிர்பாராவிதமாக இறந்து விட, கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது ஒன்றரை வயது இளவேனில் நிலவன் என்ற குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். நிஷாவின் கணவரது நினைவு தினத்தையொட்டி சோகமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 25) பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்த சமயத்தில் தனது ஒன்றரை வயது மகனுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து, தானும் விஷம் குடித்துள்ளார். இதில் குழந்தை இறந்து விட, மேலும் தான் குடித்த விஷத்தால் தனது உயிர்போகாததால், நிஷா மேலும் தனது இடது கை மணிக்கட்டு பகுதியை அறுத்துக் கொண்டுள்ளார். வெளியில் சென்றிருந்த பெற்றோர்கள் திரும்பி வந்து பார்த்தபோது நிஷா மயக்க நிலையில் இருந்துள்ளார்.

உடனே அவரை துறையூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிஷாவை, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பான தகவலின் பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார்.

மேலும் இறந்து போன குழந்தை இளவேனில் நிலவனின் உடலை மீட்டு ,துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். பெற்ற குழந்தையை கொலை செய்தது, தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக நிஷா மீது வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் விதுன்குமார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார். 

Tags:    

Similar News