தமிழகத்திலேயே முதன் முதலில் கல்விக்காக உத்தரவாத சான்றிதழை வழங்கிய துறையூர் கோவிந்தாபுரம் பள்ளி : தலைமை ஆசிரியை பெருமிதம்

தமிழகத்திலேயே முதன் முதலில் கல்விக்காக உத்தரவாத சான்றிதழை வழங்கிய பள்ளி துறையூர் கோவிந்தாபுரம் பள்ளி தான் என்று தலைமை ஆசிரியை பெருமையுடன் கூறினார்.

Update: 2021-07-09 16:06 GMT

லால்குடி கல்வி மாவட்ட அதிகாரி சண்முகம் , கோவிந்தபுரம் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதிகளில் ஆய்வு செய்தார்.

துறையூர் :

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த கோவிந்தபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்வித் தரத்தையும் ,கல்வி பயிலும் முறையையும் ஆய்வு செய்வதற்காக லால்குடி கல்வி மாவட்ட அதிகாரி சண்முகம் , கோவிந்தபுரம் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதிகளில் தனது குழுவினருடன் வீடு,வீடாக நேரில்சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது ஒவ்வொரு மாணவர்களிடமும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக நடத்தப்பட்டுவரும் பாடப்பிரிவுகள் உள்ள நடைமுறை குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது மாணவ மாணவிகள் அவரிடம் , "பள்ளியில் பயிலும் போது ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தில் சந்தேகம் இருந்தால் நேரடியாக விளக்கம் கேட்டு தெரிந்து கொள்வோம்.கல்வித்தொலைக்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் , தற்போது தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் கல்வி குறித்த சந்தேகங்கள் இருந்தால் கேட்பதற்கு முடியவில்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும் பள்ளிகள் விரைவில் திறக்க வேண்டும் எனவும் மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்தனர் .தொடர்ந்து பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பொழுது ,மாநிலத்திலேயே முதல் முறையாக உத்திரவாத சான்றிதழ் வழங்கிய முதல் பள்ளி கோவிந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளி தான் என்றனர்.

மேலும் 2012-ல் 14 மாணவர்கள்மட்டுமே படித்து வந்த நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகுணா ரோஸ்லின் பொறுப்பேற்ற பிறகு , தனியார் பள்ளிக்கு நிகராக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதைக் கண்டு , தனியார் பள்ளியில் இருந்து மாணவ , மாணவிகள் தற்போது இந்த அரசுப் பள்ளியில் சேர்ந்து வருகின்றனர். இதனால்மாணவர்களின் எண்ணிக்கைைை 161 ஆக உயர்ந்துள்ளது என்றும் , மாணவர்களின் சேர்க்கை  அதிகரித்துள்ளதால் கூடுதல் கட்டிடமும் , விளையாட்டு மைதானமும் தேவை என கோரிக்கை வைத்தனர்.

இதுபற்றி பள்ளித் தலைமையாசிரியை ரோஸ்லின் சுகுணா பேசும்போது , கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு படிப்பு ஒழுக்கம், விளையாட்டு , சரளமாக படித்தல், கையெழுத்துப் பயிற்சி , இன்முகத்துடன் பேசுதல், பிறர் கூறும் நற்செய்திகளை ஆர்வத்துடன் கேட்டல் உள்ளிட்ட அனைத்திலும் தேர்ச்சி பெறுவார்கள் என்பதற்கான உத்தரவாத சான்றிதழை , தமிழகத்திலேயே முதன் முதலில் நாங்கள் தான் தொடங்கி உள்ளோம் என்றார். உடன் வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சசிகுமார்,ஆசிரியர்கள் ஹேமமாலினி ,செல்வகுமார் , சுதா ஆகியோர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News