திருச்சி அருகே குத்தகை நில தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருச்சி அருகே விவசாய நிலம் குத்தகை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.

Update: 2021-10-22 05:01 GMT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் 20 வருடங்களாக அனுபவ பாத்தியத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார்.

இந்நிலையில் வேங்கூர் நடுத்தெருவை சேர்ந்த அன்னகாமு மற்றும் சுதாகர் ஆகியோர் ராஜசேகர் வீட்டிற்கு சென்று போலி ஆவணங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருவதாக கூறி,நிலத்தை கேட்டு மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனம் உடைந்த ராஜசேகர் மனைவி மாலதி திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாலதியின் கணவர் ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News