திருவெறும்பூரில் சுற்றித்திரிந்த பெண் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

திருவெறும்பூர் பகுதியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த பெண் 6 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Update: 2022-01-21 06:39 GMT

திருவெறும்பூர் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்து பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சாலையோரத்தில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர் மீட்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 19 பேரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதில் சிலர் உறவினர்களிடமும் ஒப்படைக் கப்பட்டனர்.

இதில் திருவெறும்பூர் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் திருச்சி தெப்பகுளம் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார். அவர் சற்று மனநலம் பாதித்த நிலையில் காணப்பட்டார். அவருக்கு கடந்த 7 மாதங்களாக உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்மூலம் அவர் தனது பெயர் விஜயா (வயது 47) என்றும், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் வசித்து வந்ததாகவும் தனக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர் என்று கூறினார்.

இதையடுத்து ஆதரவற்றோர் இல்லத்தின் உரிமையாளர் மற்றும் திருச்சி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் யசோதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வாரங்கல் மாவட்ட கலெக்டரிடம் தொடர்பு கொண்டு அவரது மகள் மாதவியை திருச்சி அழைத்து வந்தனர். பின்னர் அவரது மகள் மாதவி மற்றும் மகன் சாய்குமார் ஆகியோரிடம் அப்பெண்ணை ஒப்படைத்தனர். அப்போது விஜயா தனது பிள்ளைகளை கண்டதும் கண்ணீர் மல்க ஆரத்தழுவி கட்டி அணைத்து கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

Tags:    

Similar News