திருச்சி எஸ்.எஸ்.ஐ. கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீசார் தீவிரம்

திருச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-11-24 15:18 GMT
கைது செய்யப்பட்ட மணிகண்டன்.

திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் ஆடு திருடர்களால் கடந்த 21-ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் 2 சிறுவர்களோடு, மணிகண்டன் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் மழை நீர் தேங்கி இருந்த பள்ளத்துப்பட்டி ரயில்வே பாலத்தின் கீழ் இருந்து செல்போன் மற்றும் வாக்கி டாக்கியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். போலீசாரின் பிடியில் இருந்த மணிகண்டன் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

பள்ளத்துபட்டி பகுதியில் எஸ்.ஐ. பூமிநாதன் எங்களை மடக்கி பிடித்தார். அதன் பின்னர் சித்திரவேல், சேகர் ஆகிய போலீசாரிடம் அவர் செல்போனில் பேசினார். அத்தோடு இல்லாமல் என் தாயாரிடம் செல்போனில் தொடர் கொண்டு நான் பிடிபட்ட விவரத்தை கூறினார். இதனால் கோபமடைந்த நான் கல்லை எடுத்து வீசியதில் பூமிநாதனின் தலையில் அடிபட்டது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதனை பார்த்த என்னுடன் வந்த இரண்டு சிறுவர்களும் பயந்து போய் இரயில்வேதண்டவாளம் அருகே ஓடி சென்று விட்டனர். எப்படியும் என்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் எனது வண்டியில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பூமிநாதனை வெட்டினேன். அதன் பின்னர் சிறுவர்களை சத்தமிட்டு அழைத்து 3 பேரும் டூவீலரில் தப்பி சென்றோம்.

மேற்கண்டவாறு மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மணிகண்டனின் இந்த வாக்கு மூலத்தை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி செய்திருக்கிறது. அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில்  குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News