திருச்சி அருகே ஊராட்சி தலைவருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி அருகே ஊராட்சி தலைவருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-20 17:24 GMT

பழங்கனாங்குடி ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு  போராட்டம் நடந்தது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 5 பெரிய ஊராட்சிகளில் பழங்கனாங்குடி ஊராட்சியும் ஒன்றாகும். இங்கு பழங்கனாங்குடி தேவராயநேரிபட்டி வடக்கு, தெற்கு, அரவக்குறிச்சிப்பட்டி, பூலாங்குடி, எச்ஏபிபி, நரிக்குறவர் காலனி, ஹேப்பி நகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் அடங்கிய 12 வார்டுகள் உள்ளது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த பன்னீர்செல்வம் ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். துணைத்தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த வித்தியா சுதாகர் என்பவர் உள்ளார்.

இந்நிலையில் இன்று ஜனவரி 20 காலை தலைவர் பன்னீர்செல்வம் ஊராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் உள்ளிட்ட 12 வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணைத் தலைவர் பதவியிலிருந்து வித்யா சுதாகரை நீக்குவது தொடர்பாக தலைவர் தீர்மானம் கொண்டு வந்தார் என்று கூறப்படுகிறது.

தலைவர் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வார்டு உறுப்பினர்கள் மோகன், சுந்தர்ராஜ், நவநீதம், கற்பகம், பிரியங்கா மேரி, ராமு ஆகியோர் மட்டும் ஆதரித்து கையொப்பமிட்டுள்ளனர். துணைத்தலைவர் வித்தியா சுதாகர் தலைமையிலான வார்டு உறுப்பினர்களான கலைவாணி, அமுதா, விநாயகமூர்த்தி, விஜயலட்சுமி, நித்தியா ஆகிய 6 பேரும் இதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கவும் அலுவலகத்திலிருந்து உடனடியாக தலைவர் தனது ஆதரவாளர்களுடன் ஊராட்சி அலுவலகத்தை விட்டு உடனே வெளியேறி விட்டார்.

பின்னர் துணைத் தலைவர் வித்யா சுதாகர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஊராட்சி தலைவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்த ஊழல் முறைகேடுகளை அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த துவாக்குடி போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News