திருச்சி பெல் சார்ந்த சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க கோரிக்கை

திருச்சி பெல் சார்ந்த சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-09-19 08:40 GMT

மத்திய அரசின் பிரதான நிறுவனங்களில் ஒன்றாக பெல் நிறுவனம் இருந்து வருகிறது.திருச்சி துவாக்குடியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் நீராவி கொதிகலன்கள், அனல் மின் உற்பத்தி சாதனங்கள், காற்றாலை உற்பத்திக்கான ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதனை நம்பி திருவெறும்பூர், அரியமங்கலம், துவாக்குடி, புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தன. பொருளாதார தேக்கம், பெல் நிறுவனத்திற்கு கிடைத்து வந்த ஆர்டர்கள் குறைப்பு போன்ற காரணங்களால் அதனை சார்ந்து இயங்கி வந்த மேற்கண்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் 2016 ம் ஆண்டு முதல் நெருக்கடியை சந்திக்க தொடங்கின.இதனால் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.தற்போது இயங்கி வரும் நிறுவனங்களில் 51 நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

வங்கிகளால் செயல்பட முடியாத நிலையில் உள்ள நிறுவனங்களாக இந்த நிறுவனங்களும் வாராக்கடன் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் அளிக்காத காரணத்தால் கூடுதல் வட்டிக்கு வங்கி சாராத நிறுவனங்களை அவர்கள் அணுகி மேலும் மேலும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. மறுபுறம் வங்கிகள் தங்களது கடனை வசூலிக்க சட்ட நடவடிக்கைகளையும் தீவிரப் படுத்தி உள்ளது. நிறுவனங்களை மூடி ஏலம் விடும் நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் சிறு கூறு நிறுவனங்களுக்கு 8 வாரங்கள் அவகாசம் அளித்து சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது ஆறுதலாக இருந்தாலும் நிரந்தர தீர்வாக அமையாது என தொழில் முனைவோர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து பெல் சிறு குறு தொழில் சங்க முன்னாள் தலைவரும், தமிழ்நாடு பாய்லர் அசோசியேசன் திருச்சி பிரிவு பொறுப்பாளருமான ராஜப்பா ராஜ்குமார் கூறும் போது, திருச்சியில்முன்பு 500 யூனிட்டுகள் 7 லட்சம் டன் உற்பத்தி என்ற நிலையில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் இருந்தது 2016 ம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்து தற்போது 50 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி குறைந்துவிட்டது. நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.

சிறு குறு நிறுவனங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வங்கிகளுக்கு மத்திய அரசு நிதி சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் வங்கிகள் அதைக் கேட்பதாக இல்லை. பேரிடர் காலத்தில் மத்திய அரசு வழங்கிய நிவாரணத்தால் சில நிறுவனங்கள் மூச்சு விடும் நிலைக்கு வந்தன. இருந்த போதிலும் நலிவடைந்துள்ள நிறுவனங்களை மீட்டெடுக்கவும், புத்துயிர் அளிக்கவும், புனரமைக்கவும் நிவாரணம் மற்றும் கடனுதவிகள் அவசியமாகிறது.இதற்கு உடனடியாக 4சதவீத வட்டியில் புதிய கடன்களை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். அவ்வாறு உதவிகள் கிடைத்தால் மட்டுமே நலிவடைந்த சிறு குறு தொழில்களை மீட்டெடுத்து தொழிலாளர்கள் வேலை இழப்பை தடுக்க முடியும் என்றார்.

Tags:    

Similar News