திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் தெப்பகுளம் சுவர் மழையினால் இடிந்தது

தொடர் மழையினால் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழுந்தது.

Update: 2021-10-27 06:31 GMT

பலத்த மழையினால் திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில்  தெப்பக்குளம் சுவர் இடிந்து விழுந்தது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் எறும்பீஸ்வரர் மலை கோவில் உள்ளது. இந்தக் கோவில் எதிரே உள்ள தெப்பக்குள சுற்றுசுவர் பழுதடைந்து மிகவும் மோசமாக இருந்தது.

மேலும் அந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் சென்று வருவதற்கு ஏதுவாக தெப்பகுள சுற்று சுவரில் திருச்சி மாநகராட்சி சார்பில் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தது.

ஆனால் அது பழுதடைந்து சரிவர எரியவில்லை. இந்த நிலையில் திருவெறும்பூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தெப்பகுளத்தின் மேற்கு பகுதியில் உள்ள சுற்று சுவர் இடிந்து தெப்பகுளத்தின் உள் பகுதியில் விழுந்தது.

இதனால் அந்த பகுதி இனி இரவு நேரங்களில் இருட்டாக இருப்பதுடன் அந்த பகுதியில் வரும் வாகனங்கள் சாலை தெரியாமல் தெப்பகுளத்திற்குள் விழும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் திருவெறும்பூர் மலைக் கோவில் தெப்பக்குளத்தில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோயிலுக்கு வரும் பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News