வைகுந்த ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

Update: 2021-12-09 08:30 GMT

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுந்தம் என ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் அழைக்கப்படும். இந்த கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும்.

விழாவின் முக்கிய வைபவமான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 14-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் அக்பர்அலி உத்தரவின் பேரில் அம்மா மண்டபம் முதல் ராஜகோபுரம் வரை, தெற்குவாசல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி இளநிலை பொறியாளர் பாலமுருகன் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது பாதுகாப்பு பணியில் ஸ்ரீரங்கம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News