ஸ்ரீரங்கம் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்: பட்டர்கள் மனு

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். பட்டர்கள் அவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2021-10-07 10:00 GMT

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த துர்கா ஸ்டாலினிடம் பட்டர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஆன்மீக பயணமாக பல்வேறு முக்கிய கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.  அந்த வகையில் அவர் நேற்று இரவு திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் இன்று காலை உறையூர் வெக்காளியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,ஸ்ரீரங்க நாச்சியார் எனப்படும் தாயாரையும் தரிசித்தார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலினிடம்  பட்டர்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

இதுகுறித்து பட்டர்கள் தரப்பில் கேட்ட போது  நாங்களும் எங்களின் வாரிசுகளும் பல தலைமுறைகளாக கோயில்களில் கைங்கரியங்கள் செய்து வருகிறோம். அதே நிலை தொடர வழிவகை செய்ய வேண்டும். மேலும் யாருக்கும் எந்தவித பாதகமும் இல்லாமலும் பூஜைகள், வழிபாடுகள் அனைத்து கோவில்களிலும் முறையாக செய்து கொண்டு இருக்கின்றோம். எங்களுக்கு பூஜை வாழ்வாதாரத்தை தவிர எந்த ஊதியமும் அரசு வழங்குவதில்லை. பூஜை ஒன்றையே உயிர்மூச்சாக கருதி எங்களுடைய இறுதி காலம் வரை அந்த வழிபாட்டை செய்து கொண்டிருக்கின்றோம். அதற்கு இடையூறு இல்லாமல் எல்லாவிதமான ஆலயங்களிலும் ஆண்டாண்டு கால வழக்கப்படி வழிபாடு நடத்த அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினர்.

Tags:    

Similar News