ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று தை நிலை தேர் உற்சவ நிகழ்ச்சி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஸ்ரீரங்கத்தில் இன்று தைத்தேர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-01-17 08:24 GMT
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேர் அலங்கரிக்கப்பட்ட நிலையில் நின்றது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 19-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தைத்தேரோட்ட உற்சவத்தையொட்டி தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உத்திர வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோவில் வாளகத்திலேயே நடைபெற்று வருகின்றன.

உபயநாச்சியார்களுடன் தேரில்  எழுந்தருளினார் நம்பெருமாள்.

தைத்தேர் உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத் தேரோட்டம் இன்று நடைபெற வேண்டும். தேரோட்டத்தின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடையும். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் தைத்தேரோட்டத்திற்கு பதிலாக நிலை தேர் உற்சவம் நடைபெற்றது இதையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு தாயார் சன்னதி சென்றடைந்தார்.

Tags:    

Similar News