ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நாளை தொடக்கம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நாளை தொடங்குகிறது.

Update: 2021-10-17 09:45 GMT

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் வரும் 18-ம் தேதி துவங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் யாகசாலையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்துக்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்துக்கு 5. 30-மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7. 15-மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளிய பின் மங்களாரத்தி கண்டருளுகிறார்.பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9-மணிக்கு புறப்பட்டு 9.15- மணிக்கு யாகசாலைக்கு சென்றடைகிறார்.

விழாவின் 2-ம் நாள் முதல் 6-ம் நாள் வரை மற்றும் 8-ம் நாள் ஆகிய 6 நாட்களும் தினமும் நம்பெருமாள் யாகசாலையிலிருந்து மாலை 5. 30-மணிக்கு புறப்பட்டு 6-மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேர்கிறார். பின்னர் ஊஞ்சல் உற்சவம் இரவு 7. 15-மணிக்கு துவங்கி 8-மணி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான 7-ஆம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6-மணிக்கு புறப்பட்டு கொட்டாரவாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் இரவு 7-மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு நடைபெறும். இரவு 7. 30 மணி முதல் 8. 15 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நிறைவு நாளான 9-ஆம் நாள் 26-ஆம் தேதி நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறும்.

Tags:    

Similar News