ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் முத்தங்கி சேவை துவக்கம்

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் முத்தங்கி சேவை இன்று தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

Update: 2021-12-05 18:31 GMT

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபக்கோவிலான காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. இந்த கோவில் உயர்ந்த விமானத்துடன் கூடிய கருவறை மற்றும் அந்தராளம், முகமண்டபம், மகாமண்டபம், கருடன் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி உள்பட பல மண்டபங்கள் மற்றும் குளம் கொண்டு விளங்குகிறது.

மாதந்தோறும் சுவாதி நட்சத்திரம் அன்று காட்டழகிய சிங்கப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். மேலும் ஒவ்வொரு மாத பிரதோஷ தினமும் சிறப்பு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுவாதி நட்சத்திரம் அன்று காட்டழகிய சிங்கப்பெருமாளுக்கு பானகம் செய்வதற்கு வெல்லம் சமர்ப்பிப்பது பிரார்த்தனையாக கருதப்படுகிறது.

நரசிம்மர் பிரதோஷ காலத்தில் அவதரித்த படியாலும், 3 கண்களை உடையவர் என்பதாலும் சிங்கப்பெருமாளுக்கு பிரதோஷ காலத்தில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிரதோஷ காலங்களில் வழிபாடு செய்தால் உத்யோகம், மகப்பேறு கிட்டும், திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மூலவர் ரெங்கநாதருக்கு நல்முத்துக்களால் ஆன முத்தங்கி அணிவிக்கப்பட்டு 20 நாட்கள் முத்தங்கி சேவை நடைபெறும். அதே போன்று காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் மூலவர். லட்சுமிநரசிம்மன், லெஷ்மிதாயாருக்கும் முத்தங்கி அணிவிக்கப்பட்டு வருகிற 23-ந் தேதிவரை 20 நாட்கள் முத்தங்கி சேவை நடைபெறுகிறது.

Tags:    

Similar News