திருச்சி மணிகண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருச்சி மணிகண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை. ரூ.60 ஆயிரம் பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-12-01 04:19 GMT

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கண்தீனதயாள் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 29). இவரது மனைவி பார்வதி (வயது 28). இந்த தம்பதிகள் சரக்கு ஆட்டோவில் ஊர், ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் கோவிந்தராஜ் வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் காய்கறி வியாபாரத்துக்கு சென்றுவிட்டார்.

பின்னர் இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.60 ஆயிரம் திருட்டு போயிருந்தது. மேலும் அங்கு அறையில் வைத்திருந்த ஒரு பித்தளை அண்டா, ஒரு பித்தளை சர்வம், 2 குத்து விளக்குகள் ஆகியவையும் திருட்டு போயிருந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு இந்த துணிகர திருட்டு நடைபெற்றுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News