ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நேற்று ஓரே நாளில் 92 ஆயிரம் பேர் சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நேற்று ஓரேநாளில் 92 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-12-18 05:45 GMT

 ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி. 

பூலோக வைகுந்தம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த 3-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளினார்.

சொர்க்கவாசல் திறப்பின்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் ரெங்கா, ரெங்கா என்ற கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்தனர். அன்றைய தினம் மட்டும் மாலை 4 மணி நிலவரப்படி, ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்து இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அந்தவகையில் நேற்று மட்டும் 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். தினந்தோறும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வதால் அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags:    

Similar News