தொட்டியம் அருகே கயறு தயாரிக்கும் ஆலை வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்
தொட்டியம் அருகே கயறு தயாரிக்கும் ஆலை வேன் கவிழ்ந்து தொழிலாளர்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.;
தொட்டியம் அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் ஆலை வேன் கவிழ்ந்தது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் அருகே உள்ள கிடாரம் கிராமத்தில் தேங்காய் நார் கயறு தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் பணி முடிந்ததும், வழக்கம் போல தொழிலாளர்களை வீட்டில் விடுவதற்காக, அவர்களை வேனில் ஏற்றிக் கொண்டு வந்தனர். அந்த வேனை டிரைவர் சதீஷ்குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் அந்த வேன் காடுவெட்டி பகுதியில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த கூன் ராக்கம்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 39), தொட்டியபட்டியை சேர்ந்த சந்திரா, சரசு, சத்யா, மஞ்சுளா, பெரும்மாமா, கங்கா, காசி ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் சந்திரா, சரசு மஞ்சுளா, பெரும்மாமா ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.