ஸ்கூட்டர் திருடனை விரட்டி பிடித்த காவலருக்கு திருச்சி எஸ்.பி. பாராட்டு

ஸ்கூட்டர் திருடனை விரட்டி சென்று பிடித்த காவலர் சுரேஷின் திறமையைப் பாராட்டி திருச்சி மாவட்ட எஸ்.பி.மூர்த்தி பரிசு

Update: 2021-09-24 18:00 GMT

முசிறி பகுதியில் ஸ்கூட்டர் திருடனை விரட்டிப்பிடித்த காவலரைப்பாராட்டி பரிசளிக்கிறார், திருச்சி எஸ்.பி. ப. மூர்த்தி.

திருச்சி மாவட்டம், முசிறி டி.எஸ்.பி அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் சுரேஷ்,  கடந்த 21-ஆம் தேதி பணி முடிந்து சொந்த ஊரான தொட்டியத்தை நோக்கி தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முசிறி பெரியார் பாலம் அருகே சென்றபோது பின்னால் ஸ்கூட்டரில் வந்த ஒரு வாலிபர் அதிவேகமாக  முந்திச் சென்றுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த காவலர் சுரேஷ், உடனே அவரை விரட்டி சென்று பிடிக்க முயன்றார். இதை அறிந்த அந்த வாலிபர் மேலும் அதிவேகமாகச் சென்றார்.

இதையடுத்து, காவலர் சுரேஷ் அந்த வாலிபரை விடாமல்  துரத்திச் சென்று தொட்டியம்  காட்டுப்புத்தூர் பிரிவு ரோடு அருகே அவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், அந்த வாலிபர் தர்மபுரியை சேர்ந்த நவீன்குமார் என்பதும் முசிறி ,பார்வதிபுரம் பகுதியில் ஏசி ரிப்பேர் செய்ய வந்த மெக்கானிக்கின் ஸ்கூட்டரை திருடிச் சென்றதும் தெரிய வந்தது.  இதையடுத்து வாலிபர் நவீன்குமாரை, காவலர் சுரேஷ், முசிறி காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்து கைது செய்தனர்.  ஸ்கூட்டர் திருடிச்சென்ற  திருடனை சினிமாவில் நடப்பதைப் போல  துரத்திச் சென்று பிடித்த காவலர் சுரேஷின் திறமையைப் பாராட்டி ,திருச்சி மாவட்ட எஸ்.பி.மூர்த்தி இன்று 24-ம் தேதி நேரில் வரவழைத்து பாராட்டி பரிசு வழங்கினார். அப்போது முசிறி பயிற்சி டி.எஸ்.பி. விக்னேஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News