தொட்டியம் அருகே கடன் பிரச்சினையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் சாவு

தொட்டியம் அருகே கடன் பிரச்சினையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

Update: 2021-12-20 06:14 GMT

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் திருப்பூர் குமரன் நகரை சேர்ந்தவர் கலையரசன் (வயது 42). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேகலா (35) இந்த தம்பதியினருக்கு மோகித் (14), கனிகா (16) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மேகலா கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அகிலா, வெண்ணிலா ஆகியோரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், குறிப்பட்ட தேதியில் மேகலாவால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை.

இதனால் பணம் கொடுத்த அகிலா, வெண்ணிலா மற்றும் முத்து ஆகியோர் மேகலாவை பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், தகாத வார்த்தையால் திட்டி அவமானப் படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மேகலா கடந்த 9-ந் தேதி காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மேகலா நேற்று இறந்தார்.

இது குறித்து கலையரசன் கொடுத்த புகாரின்பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகலாவை பணம் கேட்டு அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக அகிலா, வெண்ணிலா, முத்து ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அகிலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News