திருச்சி அருகே புதுப்பெண் தற்கொலை; கணவன் தற்கொலை முயற்சி

திருச்சி அருகே புதுப்பெண் தற்கொலை செய்தார். கணவன் தற்கொலை முயற்சி செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-29 14:30 GMT

திருச்சி அருகே தற்கொலை செய்து கொண்ட வினோதினி

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காடுவெட்டி மேலவழிகாடு கிராமத்தை சேர்ந்தவர் அவிநாசி மகன் பெரியசாமி (வயது 22). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும் பெரிய நாச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராசு மகள் வினோதினி (வயது 19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று வினோதினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வயல்வெளியில் வேலையில் இருந்த கணவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வீட்டுக்கு விரைந்து வந்த பெரியசாமி தனது மனைவியின் நிலையை பார்த்து தனது கழுத்தை கத்தியால்  தானே அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் 2 பேரையும் மீட்டு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வினோதினியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன்பின் பெரியசாமிக்கு முதலுதவி சிகிச்சையும், பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணம் முடிந்து 3 மாதமே ஆவதால் முசிறி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் காட்டுப்புத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News