காதல் திருமணம் செய்த பெண் கொலை? போலீசார் விசாரணை

காதல் திருமணம் செய்து கொண்ட தன மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-24 16:30 GMT

பைல் படம்.

கரூர் பிரதட்சணம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது 3-வது மகள் சங்கீதா. இவர் கோவை சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது முசிறி இந்திரா நகரைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் ரமேஷ் (வயது 38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து தம்பதி இருவரும் முசிறி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தனர்.

இவர்களுக்கு குழந்தை இல்லாததால், சங்கீதாவை ரமேஷ் அடிக்கடி துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி காலை சங்கீதாவின் அக்காவிற்கு ரமேஷ் போன் செய்து, சங்கீதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் முசிறி போலீஸ் நிலையத்தில் சங்கீதாவின் தந்தை வீரமணி புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தான் தன் மகளை பார்த்தபோது காயங்கள் இருந்ததாகவும், மகளை பரிசோதித்த டாக்டர் தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாக கூறியதாகவும், எனவே தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News